Saturday, August 10, 2013

சாதித்தார் சிந்து :உலக பாட்மின்டனில் அசத்தல்

 நன்றி: தினமலர் 

குவாங்சு: உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஒற்றையர் பிரிவில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார் சிந்து. நேற்று நடந்த காலிறுதியில், சீனாவின் ஷிஜியன் வாங்கை வீழ்த்தினார். இதன்மூலம் குறைந்தபட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். 
சீனாவில் உள்ள குவாங்சு நகரில், 20வது உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் "நம்பர்-12' இடத்தில் உள்ள இந்தியாவின் சிந்து, சீனாவின் ஷிஜியன் வாங்கை (நம்பர்-8) சந்தித்தார். 55 நிமிடங்கள் நீடித்த காலிறுதியில், அபாரமாக ஆடிய சிந்து 21-18, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

புதிய வரலாறு:
இந்த வெற்றியின் மூலம், உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். முன்னதாக செய்னா நேவல் நான்கு முறை (2009, 10, 11, 13) காலிறுதி வரை சென்றார். அரையிறுதிக்கு முன்னேறிய சிந்து, குறைந்த பட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் ஒற்றையரில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். தவிர, உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில், மூன்றாவது முறையாக இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. முன்னதாக இந்தியாவின் பிரகாஷ் படுகோனே (வெண்கலம், பிரிவு-ஒற்றையர், 1983, இடம்-டென்மார்க்), ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா (வெண்கலம், பிரிவு-பெண்கள் இரட்டையர், 2011, இடம்-லண்டன்) ஆகியோர் பதக்கம் வென்றனர்.
செய்னா, காஷ்யப் "அவுட்'
உலக பாட்மின்டன் காலிறுதியில், உலகின் "நம்பர்-4' வீராங்கனையான <இந்தியாவின் செய்னா நேவல், தென் கொரியாவின் இயான் ஜு பெய்யிடம் (16வது இடம்) 21-23, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்த வெளியேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் காஷ்யப் (17வது இடம்), உலகின் "நம்பர்-3' இடத்தில் உள்ள சீனாவின் பெங்யு டுவிடம் 21-16, 20-22, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
உலக பாட்மின்டன்: சிந்து செய்திக்கு பாக்ஸ்
ஆந்திர பெண்
முதன்முறையாக உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் களமிறங்கிய இளம் இந்திய வீராங்கனை சிந்து, 18, சீன வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.
கடந்த 1995ல் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பிறந்த சிந்து, கோபிசந்தின் பாட்மின்டன் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். நெதர்லாந்து ஓபன் (2011), இந்திய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு (2012) தொடர்களில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், சமீபத்தில் மலேசியாவில் நடந்த மலேசிய ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு தொடரில் தங்கம் வென்று சாதித்தார். சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் இவர், சீன வீராங்கனைகளுக்கு மட்டுமல்லாமல், சக நட்சத்திர வீராங்கனை செய்னா நேவலுக்கும் சவால் தருகிறார்.
தந்தை மகிழ்ச்சி
சிந்துவின் வெற்றி ரகசியம் குறித்து அவரது தந்தை பி.வி. ரமணா கூறுகையில், ""உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் சிந்து பதக்கத்தை உறுதி செய்தது மெய்சிலிர்க்க வைக்கிறது. சீன வீராங்கனைகளுக்கு எதிராக இவரது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இவரது முன்னேற்றத்துக்கு கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் போட்டியின் மீது உள்ள ஈடுபாடு முக்கிய காரணம்,'' என்றார்.
பயம் அறியாதவர்: உதய் பவார்
முன்னாள் வீரர் உதய் பவார் கூறுகையில், ""சிந்து, உலக சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கத்தை உறுதி செய்த செய்தி அறிந்தேன். இளம் வீராங்கனையான இவர், எதிரணி வீராங்கனைகளை கண்டு ஒருபோதும் பயப்படமாட்டார். தொடர்ந்து இரண்டு முன்னணி சீன வீராங்கனைகளை வீழ்த்திய இவர், நிச்சயமாக பைனலுக்கு முன்னேறி தங்கம் வெல்வார் என நம்புகிறேன். இது, இவரது உடல் மற்றும் மனவலிமையை வெளிப்படுத்துகிறது,'' என்றார்.
கோபிசந்த் நம்பிக்கை
இந்திய பயிற்சியாளர் கோபிசந்த் கூறுகையில், ""காலிறுதியில் செய்னா, காஷ்யப் தோல்வி அடைந்தது வருத்தம் அளித்தது. இந்நிலையில் சிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது உற்சாகம் அளித்தது. சீன வீராங்கனைகளை வீழ்த்துவது எளிதான காரியமல்ல. சொல்லிக் கொடுப்பதை விரைவில் புரிந்துகொள்ளும் திறமை படைத்த இவர், இன்றைய அரையிறுதியிலும் சாதிப்பார் என நம்புகிறேன்,'' என்றார்.

No comments:

Post a Comment