Thursday, April 28, 2011

தமிழினத் துரோகிகள்..!

Source: http://www.dinamani.com/

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.

இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

தமிழினத் துரோகி ராஜபட்ச அல்ல..

Wednesday, April 6, 2011

மறுபிறவி எடுக்கும் கோயபல்ஸ்

பழ.நெடுமாறன்
Source: http://www.dinamani.com/

முந்தைய தேர்தல்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய நடவடிக்கைகளுக்குக் காரணமாகும் என தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியிருக்கிறார்.

நாடெங்கும் அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வருகிறது. வாகனப் பரிசோதனைகள், வேட்பாளர்களின் அலுவலகங்களின் சோதனைகள் என பல வகையிலும் சோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இச் சோதனைகளின் விளைவாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பணமும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு யாரும் உரிமை கோர முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவி வகிக்கும் உயர் அதிகாரிகள் ஐந்து பேர் வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு அவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சட்டம் ஒழுங்கு நிலைமைகளையும் அதிகாரிகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நான்கு பேர் டி.ஜி.பி. உள்பட ஆறு உயர் போலீஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்தது. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு நிலையைக் கண்காணிக்க வெளிமாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வளவு கெடுபிடிகளையும் தாண்டி முறைகேடுகளும் நடைபெறுவதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனுத் தாக்கல் செய்தது. அம் மனுவில் நன்றாகத் திட்டமிட்டு வாக்காளர்களுக்குப் பணம் தருகின்றனர். போலீஸ் வாகனங்கள் மூலமாகவே பணம் எடுத்துச் செல்லப்படுகிறது. எங்களால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பணப் பட்டுவாடா நடக்கிறது. இதுதொடர்பாக இதுவரை 5,400-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் விநியோகம் செய்ததாக சில போலீஸ் அதிகாரிகள் மீதே புகார் வந்துள்ளது.

இவ்வாறு பணப் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்களை அறிவித்தால் நீதிமன்றத்துக்கே அதிர்ச்சியாக இருக்கும் எனக் கூறியது கேட்ட நீதிபதிகள் திடுக்கிட்டார்கள். வாகனச் சோதனைகளையும் மற்ற நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்குத் தடை விதிக்க முடியாது எனக் கூறிவிட்டனர்.

அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உள்ளூர் போலீஸ் பாதுகாப்புக்குப் பதில் மத்திய போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், மடியில் கனமுள்ள அமைச்சர்கள் இதைக் கண்டு அச்சமடைந்தனர். ஏனெனில், தங்கள் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கொண்டுதான் தேர்தல் முறைகேடுகளை அமைச்சர்கள் நடத்தி வந்தனர். அது இயலாமல் போன கோபத்தில் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள்.

மத்திய அமைச்சர்களுக்கு 11 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அழகிரிக்கு 37 போலீஸ்காரர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அதிகப்படியான போலீஸôரைத் திரும்பப் பெற்றதைக் கண்டு அவர் கடுங்கோபம் அடைந்திருக்கிறார்.

எனக்கு ஏதாவது ஏற்பட்டால் தேர்தல் ஆணையம், மாவட்டத் தேர்தல் அதிகாரி, மதுரை நகரக் காவல் துறை ஆணையர் ஆகியோர்தான் பொறுப்பு என எச்சரித்தார்.

அவரது காரை நிறுத்திச் சோதனையிட்டதை அராஜகம் என வர்ணித்து குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தந்திகள் அனுப்பினார்.

மக்களுக்குப் போதுமான பாதுகாப்பில்லை. வீடுகள் புகுந்து கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும் சர்வசாதாரணமாகி விட்டன. இந்த நிலையில் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களது பாதுகாப்புப் பற்றியே கவலைப்படுவது இவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

மேலூரில் பிரசாரம் செய்யச் சென்ற அழகிரியின் நடவடிக்கைகளை விடியோ படம் எடுத்தவரை அழகிரியின் ஆள்கள் ஓட ஓட விரட்டினார்கள். அவர் தாசில்தாரிடம் அடைக்கலம் புகுந்தார். பின் தொடர்ந்தவர்கள் விடியோ கேமராவைப் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால், தாசில்தார் மறுக்கவே அவரையும் தாக்கி இருக்கிறார்கள். இதன் விளைவாக, அழகிரி உள்பட தி.மு.க.வினர் பலர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறவேண்டிய அவலம் நிகழ்ந்திருக்கிறது.

அழகிரியின் ஆத்திரம் அத்துடன் அடங்கி விடவில்லை. மாறாக, மதுரை ஆட்சியர் மீது குற்றம்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதி தேர்தல் அதிகாரியான சுகுமாறன் மதுரை ஆட்சியர் மீது புகார் கூறி தேர்தல் ஆணையத்துக்கு முறையீடு அனுப்பினார். ஆனால், மதுரை ஆட்சியர் குறித்து தலைமைச் செயலருக்கு அழகிரி அனுப்பிய புகாரில் சுகுமாறனின் புகார் மனுவும் இணைத்து அனுப்பப்பட்டது. சுகுமாறனின் புகாருக்கு அழகிரியே பின்னணி என்பது அம்பலமாயிற்று. தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டிய பிரச்னையில் தலைமைச் செயலருக்குப் புகார் செய்வது அறியாமையா அல்லது அதிகாரமா?

திருமங்கலம் தேர்தல் தில்லுமுல்லுவின் சூத்திரதாரியான அழகிரி தனது முறைகேடான நடவடிக்கைகளைத் தொடர முடியாத கோபத்தில் அதிகாரிகள் மீது பாய்கிறார். அவரைப் பின்தொடர்ந்து தி.மு.க. கூட்டணித் தலைவர்கள் டி.ஜி.பி. போலோ நாத் கூறாத ஒன்றை கூறியதாகத் திரித்துக் கூறி அவர் மீது புகார் செய்திருக்கிறார்கள்.

தனது மகனின் முறைகேடான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டிய முதல்வர் கருணாநிதி, தேர்தல் ஆணையத்தின் மீது பாய்ந்திருக்கிறார்.

2-4-11 அன்று சேலத்தில் பின்வருமாறு புலம்பியிருக்கிறார். ""தமிழகத்தை தி.மு.க. அரசு ஆள்கிறதா, தேர்தல் ஆணையம் ஆள்கிறதா, நான்தான் முதல்வராகத் தொடர்கிறேனா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புக்காக உள்ள போலீஸôரைத் திரும்பப் பெற உங்களுக்கு யார் அனுமதி தந்தது? பிரதமர் உங்களுக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளாரா? எங்களைப் பார்த்துப் போலீஸôர் கம்பை உயர்த்துவதா? ரூ. 80 மட்டுமே ஊதியம் பெற்றுவந்த போலீஸôருக்கு ஆயிரக்கணக்கில் ஊதியத்தை உயர்த்தியவன் நான்'' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.

ஒரு மாநில முதலமைச்சர் பேசுகிற பேச்சாக அவரின் பேச்சு அமையவில்லை. மாறாக, சந்துமுனை சிந்துபாடியின் பேச்சாக அமைந்து சந்தி சிரிக்கிறது.

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த ஒருவருக்குத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதே புரியாமல் இருப்பது வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, தேர்தல் ஆணையத்தையே மிரட்டும் வகையில் பேசுவதும், புழுதியை வாரித் தூற்றுவதும் முதலமைச்சர் பதவிக்குரிய மரியாதையையே கெடுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறி லத்திகா சரணை டி.ஜி.பி. பதவியில் அமர வைத்தவர் இவர். உளவுத் துறையின் பொறுப்பில் எதை வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாரான ஜாபர் சேட்டை நியமித்திருந்தார். முதல்வரின் கண்ணசைவுக்கு ஏற்ப கணைகளாகப் பாய்ந்த இந்த உயர் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் மாற்றியது அவருக்குக் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.

திருமங்கலம்போல வாக்காளர்களுக்குக் கறிச்சோறு போட்டும், கை நிறையப் பணம் கொடுத்தும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடலாம் என்ற அவரின் கனவில் இடி விழுந்ததைப்போல, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்தால் மனிதர் குதித்துத் கொதிக்காமல் என்ன செய்வார்?

தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தனது எடுபிடிகளைக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வைத்தார். ஆனால், அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிற்று. தலைமை நீதிபதி தலைமையில் அமைந்த ஆயம் பின்வரும் தீர்ப்பை அளித்தது. தேர்தல் ஆணையம் அரசைக் கலந்தாலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை நிராகரித்தது, தனி நபர், வணிகர் போன்றோர் கொண்டுசெல்லும் பணத்தைப் பறிமுதல் செய்ததுபோன்ற பல குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் எழுப்பியுள்ளார்.

தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் முதல்வரின் அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், தேர்தல் தேதி, தேர்தல் முடிவுகளை வெளியிடுதல்போன்ற எல்லா விஷயங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். எனவே, இந்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது.

மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவருக்கு உயர் நீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும். இதிலும், அவர் பாடங் கற்காவிட்டால் மக்கள் அவருக்குப் பாடம் புகட்டுவார்கள்.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை அவசரகால நிலைக்கு அவர் ஒப்பிடுவதற்கு முன்னால் தனது கடந்தகால நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவராக இவர் இருந்தபோது தமிழக காவல்துறையின் ஈரல் 60 சதவீதத்துக்கு மேல் அழுகிக் கெட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், இவர் ஆட்சியில் அதைத் திருத்துவதற்கு இவர் எடுத்த நடவடிக்கை என்ன? காவல்துறையைச் சீரமைக்க புதிய போலீஸ் சட்டம் கொண்டுவர வேண்டுமென உச்ச நீதிமன்றம் அளித்த பரிந்துரையை இதுவரை கருணாநிதி நிறைவேற்றவே இல்லை.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்படை புகுந்து வழக்கறிஞர்களை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மிகக் கடுமையாகத் தாக்கிய பிரச்னையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட்டும் அதை இறுதிவரை இவர் நிறைவேற்றவில்லை.

அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் மீதெல்லாம் காவல்துறை தடியடி நடத்தியதையும் யாரும் மறக்கவில்லை. உத்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது இவரது காவல்துறைதான் தாக்குதல் நடத்தியது.

சீமான், கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன் போன்ற பலர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியவர் இவரே. ஆனால், உயர் நீதிமன்றம் தலையிட்டு அனைவரையும் விடுதலை செய்தது.

இவருடைய ஆட்சியில்தான் எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை பறிக்கப்பட்டன. தமிழுணர்வாளர்கள் நடத்திய மாநாடுகளுக்குத் தடை விதித்தார். இவர் ஆட்சியில்தான் ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டப்படுகின்றன. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டு மூவர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் தி.மு.க.வினர்தான் என இவரின் பேரன் குற்றம்சாட்டினார்.

அ.தி.மு.க. ஆட்சியில் மோதல் சாவில் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டபோது, அதைக் கண்டித்துப் பிரசாரம் செய்தவரின் ஆட்சியில் 29 பேர் மோதல் சாவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கள்ளச்சாராயம், கந்து வட்டி, கட்டைப் பஞ்சாயத்து இந்த மூன்றும்தான் தமிழகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இதைச் செய்பவர்கள் முழுவதும் இவரது கட்சிக்காரர்களே.

உண்மையில் இவரது ஐந்தாண்டு கால ஆட்சிதான் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சியாகும். இவரும் இவருடைய குடும்பத்தினரும்தான் சகல அதிகாரங்களையும் தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டு சட்டத்தையும் ஜனநாயகத்தையும் சிறிதளவுகூட மதிக்காமல் செயல்பட்டனர்.

ராஜாஜி, காமராஜ் போன்றவர்கள் முதல்வராக இருந்தபோது காவல்துறையைத் தங்களிடம் ஒருபோதும் வைத்துக் கொண்டதில்லை. ஆனால், கருணாநிதி காவல்துறையை தன்னிடமே வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, காவல்துறையின் அத்து மீறல்களுக்கு இவரே பொறுப்பாளி ஆவார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேர்தல் ஆணையம் முனையும்போது மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், இவர் பதைபதைக்கிறார்.

1933-ம் ஆண்டில் ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஹிட்லரின் நாஜிக் கட்சிக்கு கம்யூனிஸ்டுகள்தான் கடுமையான எதிரிகளாக இருந்தார்கள். எனவே ஹிட்லரின் சகாவான கோயபல்ஸ் ஒரு சூழ்ச்சித் திட்டத்தைத் தீட்டினார். நாடாளுமன்றக் கட்டடத்துக்கு நள்ளிரவில் யாரோ தீ வைத்தார்கள். அதை கம்யூனிஸ்டுகள்தான் செய்தார்கள் என்ற கட்டுப்பாடான பிரசாரத்தை கோயபல்ஸ் கட்டவிழ்த்து விட்டார். இதன் விளைவாக, கம்யூனிஸ்டு கட்சி தோற்று நாஜிக் கட்சி வெற்றி பெற்றது.

கோணிப் புளுகன் கோயபல்ஸ் மறுபிறவி எடுத்துக் கருணாநிதியாக தமிழகத்தில் வலம் வருகிறார். ஆனால், தமிழர்கள் இம்முறை ஏமாறப் போவதில்லை.