Wednesday, December 1, 2010

என் வாழ்க்கை திறந்த புத்தகம்! சொத்துக் கணக்கை வெளியிட்டு, கண்ணுடையோர் காண என கலைஞர் விளக்கம்!

Source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=44414

முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். திராவிட தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் தமது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்றும் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.


தெரு வரிசையில் உள்ள கோபாலபுரம் வீட்டையும் மருத்துவமனை அமைப்பதற்கு கொடுத்துள்ள நிலையில், அதுதவிர எந்த சொத்தையும் வாங்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.




கணக்கு காட்டுகிறேன் கண்ணுடையோர் காண என்ற தலைப்பில் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது,




18 வயதில் முரசொலி வாரப்பத்திரிகையை தொடங்கினேன். திராவிடர் கழகப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டேன். கடந்த 1949ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டரில் எழுத்தாளராகப் பணியில் அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன்.




1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டு, விருநகர் நாடார் லாட்ஜில் தங்கினேன்.




சேலத்தில் குடும்பத்தோடு வசித்தபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மணமகள் என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை - வசனம் எழுதியதற்காக அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றேன். இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக உரையாடலை எழுதியபோது, அந்தப் படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியதால் தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத், பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தைத் தவிர்த்து மேலும் பத்தாயிரம் ரூபாய் ஊதியமாகத் தந்தார். இவைகளைத் தொடர்ந்து 75 திûப்படங்களுக்கு மேல் திரைக்கதை - வசனம் எழுதி, ஊதியம் பெற்றுள்ளேன்.




கடந்த 1957ஆம் ஆண்டு முதல் இதுவரை, தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்துள்ளேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் வீடுகளையும் ஒப்பிடும்பொழுது வசதி குறைவான வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன். அமைச்சர் ஆவதற்கு முன்பே 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான் கோபாலபுரம் வீடு. இன்றும் தெரு வரிசையில் உள்ள கோபாலபுரம் வீட்டில்தான் வசித்து வருகிறேன். அந்த கோபாலபுரம் வீட்டையும் மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக்கொடுள்ள நிலையில், சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.




கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் தமிழரிஞர்களுக்கு விருதுகளும், ஏழை - எளியோருக்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.




மண்ணின் மைந்தன், உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதியதற்காக கிடைத்த பல லட்சம் ரூபாய் தொகையின் மூலம் சுனாமி நிவாரணம், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி, அருந்ததியின மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.




சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பணத்தில் 10 கோடி ரூபாய் கிடைத்தது. அதில் 5 கோடி ரூபாயை வங்கியில் இருப்பு செய்து கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைத் தொடங்கப்பட்டு ஏழை - எளியோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.




வங்கிக் கணக்கில் ரூபாய் 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 வைப்பு நிதி தவிர, சேமிப்பு கணக்கில் சுமார் ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 உள்ளது. இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு.




எஞ்சிய காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன். ஏழை - எளிய மக்களின் கவலை தீர்ப்பதையும் கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன்.




கண்ணுடையோர் காண்பதற்காகவே, இந்தக் கணக்கை காட்டுகிறேன். முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கு அல்ல. இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment