Thursday, April 1, 2010

கலைஞர் அவர்களே, மௌன ராகம்தான் பாடலாமா?: டி.இராஜேந்தர்

இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.இராஜேந்தர் தலைமையில் 29.03.2010 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய மாநில அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் அறிக்கை:

தமிழீழ விடுதலைக்காக பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் கூட அருந்தாது உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தவர் மாவீரன் திலீபன். சிங்கள அரசால் சிதைக்கப்பட்டிருக்கிறது அந்த மாவீரனின் நினைவாலயம்.. இதைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை கலைஞர் இருக்கும் அண்ணா அறிவாலயம்..

வன்னியின் தொன்மையையும் பண்டார வன்னியனின் சிறப்பையும் பறைசாற்றும் நினைவுக்கல் சிங்கள அரசால் நொறுக்கப்பட்டது. பாயும்புலி பண்டார வன்னியன் என்று சரித்திர நாவல்; எழுதி சரித்திர நாயகர் என்று தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் கலைஞர் அவர்களே..! சிங்கள அரசுக்கு எதிராக சரமாரியாக கேள்விக்கணைகளைத் தொடுத்திருக்க வேண்டும். மாறாக சராசரி தமிழனாகக் கூட குரல் கொடுக்க மறுக்கிறீர்களே ஏன்?

இப்படி மௌன ராகம்தான் பாடலாமா? தமிழினத்தின் மானம்தான் இப்படி போகலாமா? நீங்கள் காப்பாற்ற நினைப்பது உங்கள் அரசு எங்கே போனது உங்கள் போர் முரசு? இலங்கையிலே மாவீரர்களின் கல்லறைகள் தகர்க்கப்படுகிறது. நினைவுத் தூண்கள் நொறுக்கப்படுகிறது. சிங்களவன் நிலத்தைக் கீறி எடுக்கிறான்.. எலும்புகளை வாரி இறைக்கிறான்.. குப்பையிலே கொட்டிக் களிக்கிறான்.. இங்கிருக்கும் தமிழன் ஏன் கைகட்டிக் கிடக்கிறான்?

அன்று 1981-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி யாழ் நூலகம் சிங்களர்களால் எரிக்கப்பட்டது.. அதுபோல் தமிழீழத்தின் கடைசி மன்னன் சங்கிலியின் சிலையும் நொறுக்கப்படலாம்.. தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சின்னங்களும் சிதைக்கப்படலாம்… இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இங்கிருக்கும் தமிழக அரசுதான் தூங்கலாமா? இலங்கைத் தமிழர்கள்தான் இத்துணை துயரங்களைத் தாங்கலாமா?

ஈழத்திலே சிங்கள இராணுவம் புலிகளுடன் நடத்திய யுத்தம் முடிந்து விட்டது. இருந்தும் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்க மறுப்பது ஏன்? தமிழர்களின் சொந்த நிலங்களில் சிங்களர்களை குடியமர்த்தி வருவது ஏன்? சிங்களவர் தமிழீழத்தின் கல்வெட்டுகளை மட்டுமா உடைக்கிறார்கள்? தமிழ் மக்களின் இதயத்தையே உடைக்கிறார்கள்… பெயர்ப் பலகைகளில் இருக்கும் தமிழ் எழுத்துகளை மட்டுமா அழிக்கிறார்கள்? தமிழ் இனத்தையே அல்லவா அழிக்கிறார்கள்.. இங்கிருக்கும் தமிழனே நீ ஒற்றுமை இல்லாதவன் என்று சொல்லாமல் சொல்லி அல்லவா பழிக்கிறார்கள்..

மத்திய அரசே! நீங்கள் போட்ட நிதிநிலை அறிக்கை! அதில் பெட்ரோல் டீசல் விலையேற்றம்.. மக்கள் வாழ்வில் இல்லையே ஏற்றம்.. மாறாக அவர்கள் வாழ்விலோ ஏமாற்றம்.. மாநில அரசே! அரிசி மட்டும் குடும்ப அட்டைக்கு கிடைத்தால் போதுமா? காய்கறி பருப்பு வகைகள் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கும்? கல்லையும் மண்ணையும்தான் காய்ச்சிக் குடிக்க முடியுமா?

கடும் துயரத்தைத் தரும் உங்கள் ஆட்சியில்தான் வாழ்க்கை நடத்த முடியுமா? லாரி வைத்திருப்பவர்களே..! பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை எதிர்த்து நடத்த நினைக்கிறார்கள் வேலை நிறுத்தம்..! அவர்கள் தங்கள் லாரியிலே சுமையைத்தான் ஏற்றுகிறார்கள்… ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் மக்களின் தலையில் சுமையை அல்லவா ஏற்றுகிறீர்கள்.. மனச் சுமையை அல்லவா கூட்டுகிறீர்கள்.. இதற்கு என்னதான் முடிவு? என்றுதான் கிடைக்குமோ விடிவு..?

தமிழக அரசே..! நீ கட்டிக் கொண்டேயிருந்தால் போதாது மேம்பாலம்.. நீங்கள் விலைவாசியை கட்டுப்படுத்துவோம் என்பதெல்லாம் வெறும் வாய்ஜாலம்.. உங்கள் ஆட்சியில் மக்கள் வாழ்க்கைக்கோ கெட்ட காலம்.. இந்த நிலை தொடர்ந்தால் மத்திய – மாநில அரசே! உங்கள் ஆட்சிக்கே இருக்காது எதிர்காலம்..!
Source: http://www.puthinamnews.com/?p=8019#more-8019

No comments:

Post a Comment